தமிழ்நாடு சுற்றுலா கண்காட்சியின் அறிமுக விழாவை ஜிஆர்டி ஹோட்டல்ஸ் தலைமை செயல் அதிகாரி திரு. விக்ரம் கோட்டா, திரு.கோபிநாத், திரு. சுந்தர் சிங்காரம் மற்றும் திருமதி. சிவாங்கி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

78

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தமிழ்நாடு சுற்றுலா கண்காட்சியின் அறிமுக விழாவை ரெசிடென்சி ஹோட்டல்ஸ் சிஇஓ திரு.கோபிநாத், திருமதி. சிவாங்கி, ஜிஆர்டி ஹோட்டல்ஸ் தலைமை செயல் அதிகாரி திரு. விக்ரம் கோட்டா, மதுரை டிராவல் கிளப்பின் துணைத் தலைவர் திரு. சுந்தர் சிங்காரம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

அந்தவகையில், இந்தியாவின் முதன்மையான சுற்றுலாத் தளமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின், சுற்றுலா தரத்தை பராமரிக்கவும், வலுப்படுத்தவும், தமிழ்நாடு சுற்றுலாத் துறையானது, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பல்வேறு தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களை வெளிக்கொண்டுவரும் வகையில் பல விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கேரளா டிராவல் மார்ட்டின் (கேடிஎம்) வெற்றிகரமான சுற்றுலா மேம்பாட்டிலிருந்து உத்வேகம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக, தமிழ்நாடு சுற்றுலாப் பங்குதாரர்கள் ஒன்றிணைந்து இந்த தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போவை (TTE) தொடங்கியுள்ளனர்.

இந்த முன்முயற்சியானது தமிழ்நாட்டின் சுற்றுலா சலுகைகளை மேம்படுத்துவதையும், மாநிலத்திற்கு அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ (TTE) என்பது மதுரையில் உள்ள டிராவல் கிளப், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் (SIHRA) ஆகியவற்றால் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஆகும். இதில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மூலம் சுற்றுலா தொடர்பான விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு மதுரையில் செப்டம்பர் 20 முதல் 22 வரை கிராண்ட் மதுரை – ஜி.ஆர்.டி ஹோட்டலை ஒட்டியுள்ள ஐடிஏ ஸ்கடர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து 250 வாடிக்கையாளர்கள் இதில் பங்கு பெற உள்ளனர். இவர்களில், டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் சுற்றுலாத்துறை வல்லுனர்கள், தமிழகத்தின் சுற்றுலாத் தயாரிப்புகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரப்படுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 150 முதல் 200 பங்குதாரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். முதன்முறையாக பங்கேற்கும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக, அரங்குகள் நான்கு பகுதிகளாக பிரிக்கபட்டுள்ளன.

நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கூடுதலாக, தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்காக விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு டூரிசம் எக்ஸ்போ, பாரம்பரியம், ஆன்மீகம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய, சுற்றுலா கருப்பொருள்களைக் காட்சிப்படுத்துகிறது என்றும், அதன் மூலம் தமிழ்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தொழில்துறை பங்குதாரர்களின் முயற்சி என்றும் ஜிஆர்டி ஹோட்டல்ஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் பயண பணிக்குழு தலைவருமான திரு. விக்ரம் கோட்டா தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டைத் திருமணங்களுக்கான சிறந்த தலமாக நிலை நிறுத்தவும் உதவும் என்று கூறிய அவர், இந்த கண்காட்சி 250 வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக உள்நாடு மற்றும் மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 150 விற்பனையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

செப்டம்பர் 20 முதல் 22 வரை மதுரையில் இந்த நிகழ்வில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் (SIHRA), மதுரை டிராவல் கிளப், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பயண முகவர்கள் பங்கேற்கின்றனர் என்றும், இது வரும் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் கூறினார்