நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.

99

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு இல்லை. 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒப்பந்தம்.

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வந்தார்.

அறிவாலயம் வந்த கமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அதன்படி, திமுக கூட்டணியில் இணைந்துள்ள மநீமய்யத்திற்கு நாடாளுமன்ற தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.

அதற்கு பதில் மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இந்த கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியிருக்கிறோம்”, என்றார்.

சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன்

அரசியல் பிரிவு ஆசிரியர்