OTT தளத்தில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 3, 2025) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
Production No.6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், அரசியல் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. அதிலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்த படைப்பாக ரசிகர்களைக் கவரவுள்ளது.
இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், கிங்ஸ்லி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், VJ ஆண்ட்ரூஸ், சத்யன், சாம்ஸ், கிங்காங், தேவி மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, நட்டி சுப்ரமணியம் – தம்பி இராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு பெரும் ஈர்ப்பாக அமைய உள்ளது.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறியதாவது,
“இந்த படம், நகைச்சுவையுடன் கூடிய அரசியல் களமாக உருவாகிறது. உமாபதி தனது முதல் படத்திலேயே திறமையை நிரூபித்தவர். அவர் இந்தக் கதையைச் சொன்னவுடன், உடனே அதில் மூழ்கிப் போனேன். நட்டி சுப்ரமணியம் அவர்கள் கதைகளின் நட்சத்திரமாகவும், தயாரிப்பாளர்கள் நம்பும் நடிகராகவும் வளர்ந்துள்ளார். தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் போன்ற தேசிய விருது பெற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். இன்று இப்படப்பிடிப்பைத் துவங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”
இயக்குனர் உமாபதி ராமையா கூறியதாவது,
“திரைத்துறையின் மேல் அளவில்லாத ஆர்வமுள்ள கண்ணன் ரவி சார் உடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நிஜத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படமாக இது அமையும். நட்டி சார் ஹீரோவாக இணைந்திருப்பது மகிழ்ச்சி. சில நிமிடங்கள் கதையைச் சொன்னவுடனேயே அவர் சம்மதித்தது எனக்கு பெரும் திருப்தியையும், இந்தக் கதையை அப்படியே திரையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பையும் அளித்தது. இன்று படப்பிடிப்பைத் துவக்கி விட்டோம், விரைவில் ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.”
தந்தை–மகன் கூட்டணி இந்தப் படத்தின் சிறப்பம்சம். கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதி இருக்க, மகன் உமாபதி இயக்குகிறார்.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – தங்கமணி
கலை – ஹசினி பவித்ரா
நடனம் – சாண்டி
சண்டை – மகேஷ் மேத்யூ
உடை – நவதேவி
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – செல்வா
நிர்வாக தயாரிப்பாளர் – உமாபதி ராஜா
தயாரிப்பு நிர்வாகி – எம். இளையராஜா
பி.ஆர்.ஓ – ரேகா