முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்யும் நடிகர் விஷால்!

15

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், தனது பாணியில் அவருக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஏழை மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறார். மேலும், தான் நடத்தும் நிகழ்ச்சி மற்றும் மற்றவர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு வழங்கும் பொன்னாடை, பூங்கொத்து உள்ளிட்ட பரிசுகளை தவிர்த்து வருபவர், அதற்கு மாறாக சம்மந்தப்பட்டவர்களின் பெயரில் ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஜூன் 15 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், அவருக்கு வழங்கப்படும் பரிசாக, அவரது பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜயிடம், மூன்று மாணவிகளின் விபரம் அடங்கிய கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். அதில், “உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்களுக்கான சேவையில் உங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்கள் மீதான மரியாதை மற்றும் பாராட்டுக்குரிய அடையாளமாக, பின்தங்கிய நிலையில் உள்ள மூன்று மாணவிகளின் உயர் கல்விச் செலவை உங்கள் பெயரில் ஏற்று நடத்த நான் முடிவு செய்துள்ளேன்.

தற்காலிகமான ஒரு செயலாக அமையும் பூங்கொத்தை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு குழந்தையின் கல்விக்கு ஆதரவளிப்பது நீண்டகால நற்பலனைத் தருவதோடு, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த சிறிய முயற்சியை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கான உங்கள் சேவையில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும், நல்வாழ்வும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவிகளின் பெயர் மற்றும் அவர்கள் படிக்கும் பட்டப்படிப்பு ஆகியவற்றின் விபரங்களையும் விஷால் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

தனியொரு பெற்றோர் கொண்ட, 12ம் வகுப்பில் 437 மதிப்பெண்கள் பெற்ற, குடும்பத்தின் முதல் பட்டதாரியான எம்.லில்லி புஷ்பம் – B.Sc (CS)

குடும்பத்தின் முதல் பட்டதாரியான, 12ம் வகுப்பில் 399 மதிப்பெண்கள் பெற்ற, தினக்கூலி வேலை செய்யும் பெற்றோர் கொண்ட எம்.ஹரினி – BCA

குடும்பத்தின் முதல் பட்டதாரியான, 12ம் வகுப்பில் 431 மதிப்பெண்கள் பெற்ற, தினக்கூலி வேலை செய்யும் பெற்றோர் கொண்ட பி.தர்ஷினி – B.Com (G)

நடிகர் விஷாலின் இந்த விலைமதிப்பெற்ற பரிசை பெற்றுக்கொண்ட முதல்வர் ஜோசப் விஜய், அவருக்கு நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் நன்றி தெரிவித்து, ”உங்களின் இத்தகைய சேவை முயற்சி தொடரட்டும்”, என்று வாழ்த்தினார்.