நடிகர் சங்க தலைவர்கள் பங்கேற்ற நாடக நிகழ்ச்சி!

10

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் திராவிட சிந்தனையாளருமான, கலைமாமணி எஸ்.எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று (14.11.25) மாலை சென்னை, தி.நகர், வாணி மஹாலில் நடைபெற்றது.

இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி, செய்தித் தொடர்பு அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. எஸ்.இளங்கோவன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு, எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் அவர்களின் மகனும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர், திமுக தலைமை நிலைய செயலாளர், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான கலைமாமணி பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் கருணாஸ், நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினரும் மூத்த நடிகையுமான சச்சு, லதா, நடிகர்கள் ஆனந்த் பாபு, பொன்வண்ணன், போஸ் வெங்கட், ஶ்ரீமன், பெப்சி விஜயன், லலிதா குமாரி, குட்டி பத்மினி உள்பட திரளான அரசியல், திரை பிரபலங்கள் கலந்துகொண்டு கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் திருவுருவப் படத்துக்கு மரியாதை செய்தனர்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் வழக்கறிஞருமான மீனாட்சி முருகன் வரவேற்புரை ஆற்ற, நிகழ்ச்சியை வழக்கறிஞர் அருணா அசோக் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலைமாமணி எஸ் எஸ் சிவசூரியன் பேரனும் வழக்கறிஞருமான சிவசூரியன் முருகன் செய்திருந்தார்.
நேற்று தொடங்கப்பட்ட எஸ் எஸ் சிவசூரியன் கலைக்கூடம் நாடகக் கலைக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் தேவையான களம் அமைக்கவும், நாடகங்கள் தயாரிப்பு மற்றும் அழிந்துவரும் கலைகளை மீட்டெடுத்து வளர்க்கும் பணிகளிலும் ஈடுபட இருக்கிறது. அதன் தொடக்கமாக நேற்று திரை நாடகக் கலைஞர் அனந்த குமார் என்பவரின் ‘கலைஞன்’ என்னும் தனி நபர் நாடகம் நிகழ்த்தப்பட்டது.