வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள்.. பரவசப்படுத்திய கலைச்சங்கமம் !

29

சென்னையிலுள்ள லலித் கலா அகாடமியில், ‘கடந்த காலத்தின் மறுமலர்ச்சிகள்’ என்ற தலைப்பில் கலைஞரும், ஆராய்ச்சியாளருமான திருமதி ருசி ஆத்ரேயாவின் கண்கவர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ஓவியங்களின் தனித்துவமான தொகுப்பை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்தியது.

பிரபல தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான பத்ம பூஷண் ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். கலை வரலாற்றாசிரியர்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற கலை ஆர்வலர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். திருமதி ஆத்ரேயா இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பல மூத்த இராணுவ அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

ருசி ஆத்ரேயாவின் படைப்புகள், அமைப்பு மற்றும் கலப்பு ஊடகங்களின் தனித்துவமான கலவையாகும். அவரது உன்னதமான கைவினைத்திறன் கண்காட்சி முழுவதும் எதிரொலித்தது. பண்டைய தளங்களில் காணப்படும் பாறை மேற்பரப்புகளை அடுக்கு அமைப்புகளைப் பயன்படுத்தி, வரலாற்றுக்கு முந்தைய படங்களின் சாரத்தை அவர் மீண்டும் தனது படைப்புகளில் உருவாக்கியிருந்தார்.

அவரது ஓவியங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய கூறுகள், அவரது விரிவான பி. எச். டி ஆராய்ச்சியின் போது இந்தியா முழுவதும் உள்ள உண்மையான பாறை ஓவியங்களிலிருந்து கைப்பற்றப்பட்டவை. மேலும் ஆரம்பகால வேட்டைக்கார-சேகரிப்பாளர் சமூகங்களின் கலை வெளிப்பாடுகளை அவரது படைப்புகள் வெளிப்படுத்தியிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கலையாக கூட கருதப்படாத வரலாற்றுக்கு முந்தைய பாறைக் கலையின் அழகியல் கொள்கைகளை மிக அழகாக தனது ஓவியங்களில் காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சமாக ‘நவரசம்’ பற்றிய சிறப்புத் தொடர் இடம்பெற்றது. ஒன்பது அடிப்படை மனித உணர்ச்சிகள், ஒவ்வொன்றும் அவற்றுடன் தொடர்புடைய வண்ணங்களைப் பயன்படுத்தி சித்தரிக்கப்பட்டிருந்தன. இந்தத் தொடர், வரலாற்றுக்கு முந்தைய கலைக் கூறுகளை உணர்ச்சிகரமான நிறமாலையுடன் இணைத்து, காலப்போக்கில் கலை வெளிப்பாட்டின் உலகளாவிய தன்மை குறித்த புதிய கண்ணோட்டத்தை பார்வையாளர்களுக்கு வழங்கியது.

இந்தக் கண்காட்சி வெறும் ஒரு காட்சி விருந்தாக மட்டுமல்லாமல், வரலாற்றுக்கும் சமகால கலை வெளிப்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் செய்தது. ஆத்ரேயாவின் ஓவியங்கள், பார்வையாளர்களை காலத்தின் வழியாக ஒரு பயணத்திற்கு அழைத்துச் சென்று, இந்தியாவின் ஆரம்பகால கலை வெளிப்பாடுகளின் அழகையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் நவீன வடிவத்தில் அனுபவிக்கச் செய்தது. மொத்தத்தில் இந்த கலைச் சங்கமம்.. கலை ஆர்வலர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என அனைவரையும் பரவசப்படுத்தியது என்றால் அது மிகையல்ல !