நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தை டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகுங்கள்!

11

இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் விநியோகஸ்தர்களுடன் நடந்த பிரமாண்ட நிகழ்வின் போது படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. ரசிகர்களின் விருப்பமான ‘புஷ்பாராஜ்’ டிசம்பர் 5 ஆம் தேதி ரசிகர்களின் இதயத்தை மீண்டும் ஆள வருகிறார்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவம் தர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சுகுமார் ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகம் பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனை படைத்து ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பெரிய திரையில் அவரை மீண்டும் புஷ்பாவாக காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2024 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் வெளியாகும் ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் இந்த ஆண்டை மகிழ்ச்சியுடன் விடை கொடுக்க ஏதுவான பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக இருக்கும். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் நடித்துள்ள இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் பெற்றுள்ளது.