“இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், மக்கள் வசிக்கும் இடத்திற்கே தேடி வந்து மருத்துவம் பார்க்கும் நோக்கில், 9 மாநிலங்களில் 32 ‘ஆரோக்கிய சேவா கேந்திரா’ மையங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் முதல் மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மட்டுமல்லாமல் நாகர்கோவில், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய இடங்களிலும் இந்தச் சேவைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.
குறிப்பாக, 20 முதல் 40 சதவீதம் வரை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைக் குறிவைத்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களின் ஆலோசனைகள், இரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்படுவதுடன், பெரியவர்களுக்கான நிமோகோக்கல் தடுப்பூசி சேவையும் முழுமையாக இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பிரமிள் ஸ்வஸ்த்யா அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் 60 ஆயிரம் பேருக்குச் சிகிச்சை அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ள ஸ்டார் ஹெல்த் நிறுவனம், அடுத்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. எளிய மக்களும் தரமான ஆரம்பச் சுகாதாரச் சிகிச்சையைத் தங்களது வீட்டின் அருகிலேயே பெறுவதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆனந்த் ராய் தெரிவித்துள்ளார்.”