நடிகர்கள் கார்த்திகேசன்- ராஜசிம்மன் – சரவணன் இணைந்து நடிக்கும் ‘அறுவடை’ படத்தின் தொடக்க விழா

34

லாரா’ திரைப்படத்தை தொடர்ந்து எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பான ‘அறுவடை’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன்நடிக்க, அவருடன் ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜசிம்மன் தீபா, கவிதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஆர். ஜே. ரவீன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரகு சரவணக்குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கே. கே. விக்னேஷ் மேற்கொள்ள சண்டை காட்சிகளை கார்த்திக் அமைக்கிறார். கிராமிய பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.

கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் ‘அறுவடை’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் திரைப்பட தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்- நடிகர் – அருண்பாண்டியன், பாடகர் ‘கானா’ உலகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.‌

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சனை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளோம் ” என்றார்.

இதனிடையே ”அறுவடை’ படத்தின் தொடக்க விழாவில், இயக்குநரும், தயாரிப்பாளருமான எம். கார்த்திகேசனின் பிறந்த நாளை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.