முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி லோகோ, சீருடையை பி.வி.சிந்து அறிமுகம் செய்தார்
இந்திய விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் – 2026 போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது.
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (எம்.ஒய்.ஏ.எஸ்.), இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேளனத்துடன் (டி.பி.சி.எப்.ஐ.) இணைக்கப்பட்ட தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் (டி.என்.டி.பி.சி.ஏ.) இப்போட்டியை ஒருங்கிணைக்கிறது.
இப்போட்டிகள் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி கல்லூரியில் வருகிற அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 வரை நடைபெறவுள்ளன. ஆசியா முழுவதிலும் இருந்து சுமார் 600 சர்வதேச வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பி. வி. சிந்து லோகோ மற்றும் ஜெர்சி அறிமுகம்:
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் – 2026 போட்டியின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் ஜெர்சி அறிமுக விழா, சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டல் ராமடாவில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியாவின் முன்னணி விளையாட்டு நட்சத்திரமும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி. வி. சிந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிக்கான லோகோ மற்றும் சீருடையை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;
நான் விளையாட்டுத்துறையில் பிரகாசிப்பதற்கு என்னுடைய பெற்றோர் முக்கிய காரணம். என்னுடைய தந்தையும், தாயும் வாலிபால் விளையாட்டில் பிரகாசித்தவர்கள். அதனால் தான் இந்த போட்டியை முன்னின்று நடத்தும் வாலிபால் வீரர் ஏ.சிவராமனின் அழைப்பை மறுக்க முடியாமல் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளேன்.
ஒவ்வொரு விளையாட்டையும் வளர்த்து அதில் வீரர், வீராங்கனைகளை உருவாக்கி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் புகழ் சேர்த்து தருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.
அது போல் இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாட்டிலும் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டோர் இந்திய அளவில் மத்திய அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளதாக கூறினர். இது சாதாரண விஷயம் அல்ல.
வீரர், வீராங்கனைகள் பலரை உருவாக்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர நாடு முழுவதிலும் பல போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
அதில் ஒன்றாக தற்போது சென்னையில் கே.சி.ஜி. கல்லூரி வளாகத்தில் 13 நாடுகள் பங்கேற்கும் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதிலும் நம் இந்திய வீரர்கள் பிரகாசித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த போட்டிக்கு உதவும் ஸ்பான்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
லோகோ மற்றும் ஜெர்சி அறிமுக விழாவில் கே.சி.ஜி. கல்லூரி சேர்மன் ஆன்னி ஜேகப், இந்திய டென்னிஸ் பந்து சம்மேளன நிர்வாகிகள், தமிழக டென்னிஸ் பந்து சங்க தலைவர் ஜாவித் கடாலா, செயலாளர் ஞானவேல், போட்டி அமைப்புகுழு தலைவரும், சர்வதேச வாலிபால் வீரருமான ஏ.சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் மொத்தம் 13 நாடுகள் கலந்து கொள்கின்றன:
இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்காளதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யூ.ஏ.இ.) குவைத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
சுவீடன் உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டி:
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் – 2026 போட்டியில் வெற்றி பெறும் அணி, சுவீடனில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். இது ஆசிய அணிகளுக்கு உலக அரங்கில் தடம் பதிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்.
முந்தைய சர்வதேச சாதனைகள்:
ஆசிய சாம்பியன்ஷிப் (நேபாளம், 2023): இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
தெற்காசிய விளையாட்டுகள் (நேபாளம், 2024): இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
…………..