மதுரை: மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் S. குருசங்கருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான ஆடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அதன் தலைவர் டாக்டர் S. குருசங்கரின் தலைமையில் பல ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் S. குருசங்கரை அச்சுறுத்தும் வகையில் அவரது சகோதரி டாக்டர் பிரதீபா பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், டாக்டர் எஸ். குருசங்கரை மிரட்டும் வகையிலும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் கடுமையான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, “உயிரோடு இருந்தால்தானே… உயிரோடு இருக்க மாட்டார்கள். நான் இருக்கவும் விட மாட்டேன்” என்ற பொருளில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும், “இவன் ஒன்றும் இல்லை; இவனுடைய சவக்குழியை இவனே தோண்டிக் கொண்டிருக்கிறான்.” என்ற வகையிலும் கடுமையான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆடியோ பதிவு தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனிநபரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு மிரட்டலும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக, சமூக நலன் மற்றும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒரு முக்கிய பொது நபருக்கு எதிராக இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிப்பதாகும்.