பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  

20

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது.

குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. ஒருவரின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவுக்கு வளர்கிறது. போராட்டம் தீவிரமடையும்போது அதன் விலையும் அதிகரிக்கிறது. இறுதியில், ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையேயான எல்லை மெதுவாக மறைந்து விடுகிறது.

இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பு – அருள் மோசஸ், கலை இயக்கம் – பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி – டான் அசோக், ஒலியமைப்பு – ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார், ஒப்பனை – ராமச்சந்திரன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் “மக்கள் காவலன்” திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

பிர்லா ஸ்டுடியோஸின் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி கூறியதாவது:

“பைசன் காளமாடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் காவலன் மூலம் நீலம் ஸ்டுடியோஸுடன் எங்களது கூட்டணியின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வலுவான, தனித்துவமான குரல் கொண்ட படைப்பாளிகளையும், ரசிகர்களுடன் ஆழமாக இணையும் கதைகளையும் தொடர்ந்து வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே இயக்குநர் சந்தோஷ் குமார் அந்தப் பார்வையை மிகத் தெளிவாக கொண்டு வந்துள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான கே. மணிகண்டன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பது எங்களுக்கு பெருமை. மக்கள் காவலன் வலிமையான, பொழுதுபோக்கான, அதே நேரத்தில் ஆழமான உணர்வுகளைத் தாங்கிய திரைப்படம். இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம்.”

நீலம் ஸ்டுடியோஸின் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் கூறியதாவது:

“மக்கள் காவலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிகத் திறமையான இளம் எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் குமாரை ரசிகர்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு கிடைத்த மிகவும் உற்சாகமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மணிகண்டனின் அற்புதமான நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். அதேபோல், இயக்குநர்களின் பார்வையை மையமாகக் கொண்ட, பெரிய அளவில் உருவாகும் திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என்ற எங்களது நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பிர்லா ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைவதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.”

நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது:

“மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் குமார் கூறியதாவது:

“மக்கள் காவலன் எனது முதல் முழுநீள திரைப்படம். நான் சந்தித்த மனிதர்கள், நான் வாழ்ந்த அனுபவங்கள், நான் நேரில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதை உருவானது. அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது. அதே நேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது. இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நேர்மையையும் தீவிரத்தையும் மணிகண்டன் மிகச் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். இந்தக் கதையை நம்பி, என் முதல் முழுநீள திரைப்படத்திற்கு வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டுடியோஸுக்கும் நீலம் ஸ்டுடியோஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”