தமிழ் தவிர வேறு மொழியில் படம் இயக்க மாட்டேன்: ‘ரசவாதி’ சாந்தகுமார் பேட்டி

மெளனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது இயக்கி உள்ள படம் ‘ரசவாதி: தி அல்கெமிஸ்ட்’. படத்தின் நாயகனாக அர்ஜூன் தாஸ், நாயகியாக தன்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் ரம்யா சுப்ரமணியன் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.

படம் குறித்து இயக்குனர் சாந்தகுமார் அளித்த பேட்டி வருமாறு:

ஒவ்வொரு படத்திற்கும் ஏன் இடைவெளி விடுகிறீர்கள்?

‘மௌனகுரு’ படத்திற்கு பிறகு ‘மகாமுனி’ இயக்க சிறிய இடைவெளி இருந்தது உண்மைதான். ஆனால் இந்த படத்திற்கு இடைவெளி எதுவும் இல்லை. கொரோனா காலம் வந்ததால் சற்று தாமதமாகி விட்டது. இனி இந்த இடைவெளி இருக்காது.

ரசவாதி என்ற சொல் வழக்கத்தில் அதிகம் இல்லாதபோது அதையே தலைப்பாக வைத்திருக்கிறீர்களே?

இப்போது குறைவுதான் முன்பு அதிகம் பயன்படுத்தப்பட்டது. ரசவாதம் என்பது உலோக மாற்றம். அதுவே மனிதனின் மூளைக்கும் பொருந்தும். அதுதான் படத்தின் கதை.

சினிமாவில் அதிகம் இடம் பெறாத சித்த வைத்தியர் கேரக்டரை பிரதானப்படுத்தியது ஏன்?

உங்கள் கேள்வியில் பதில் இருக்கிறது. அதிகம் இடம்பெறாததால் வைத்தேன். அலோபதி டாக்டர்களை போன்றே பல இளைஞர்கள் சித்த வைத்தியம் படித்து விட்டு டாக்டர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகம் அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் இந்த கேரக்டருக்கு ஒரு அலோபதி டாக்டரை கொண்டு வரமுடியும் என்கிற நிலையிலும் சித்த வைத்தியரை கொண்டு வந்தேன்.

வேறொரு இயக்குனர் இயக்கியதாகல் மௌனகுரு படம் இந்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதனால் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டால் நீங்கள் இயக்குவீர்களா?

தமிழ் தவிர வேறு மொழியில் படம் இயக்கும் எண்ணம் இல்லை. எனக்கு தெரிந்த மொழி, என் மொழி தமிழிலேயே படம் இயக்குவேன். ஒரு வேளை ரீமேக் ஆனால் அதனை அந்தந்த மொழி இயக்குனர்கள் இயக்குவார்கள். மௌனகுரு படத்தை இந்தி, தெலுங்கில் இயக்கும் வாய்ப்பு வந்தபோது கூட அதனை நான் மறுத்து விட்டேன்.

ரசவாதி எப்படி இருக்கும்?

எனது முந்தைய படத்தின் தரம் இருக்கும் ஆனால் ஆனால் அவற்றின் கதை, களம் இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இது மூன்றாவது ஒரு அனுபவத்தை தரும். எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக இருக்கும்.

திடீர் தயாரிப்பாளரானது ஏன்?

நான் விரும்பியபடி சுதந்திரமாக படம் எடுக்க தயாரிப்பாளர் ஆனேன். இன்னொரு தயாரிப்பாளர் என்பதால் முந்தைய படங்களில் விரும்பிய சிலவற்றை செய்ய முடியவில்லை. அதனால் தயாரிப்பாளர் ஆனேன். ஆனால் தொடர்ந்து படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. அது ஒரு கடினமான வேலை.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Comments (0)
Add Comment