சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது – ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் பேச்சு

சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். குறிப்பாக உழைப்பாளர்கள் தினம், உழைப்பாளர்கள் பற்றி, உழைக்கும் மக்கள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது என்றாலும், 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காகோ நகரத்தில், மிகப்பெரிய அளவிலான எழுச்சியை தொடர்ந்து மே மாதம் 1 ஆம் உலக பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரும் உழைப்பாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியது. இன்று உலகத்தில் நாடு கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து, கலாச்சாரங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தினம் என்றால் அது உழைப்பாளர்கள் தினம் மட்டுமே, வேறு எந்த தினமும் இல்லை. அப்படிப்பட்ட மே தினத்தை மையமாக கொண்ட இந்த ‘உழைப்பாளர்கள் தினம்’ படம் என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

இந்த படத்தின் கதையைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது, இருந்தாலும் உழைப்பாளர்கள் தினம் பற்றிய சில முக்கியமான விசயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நிகழ்ச்சி நடக்க கூடிய இன்றைய தினம் குறிப்பிடத்தக்க நாள். உழைப்பாளர் வர்க்கத்தின் தொழிலாளிகளை, முதலாளி வர்க்கத்தினராகவும், ஆளும் வர்க்கத்தினராகவும் மாற்றிய உன்னதமான மாமனிதர் லெனின் பிறந்தநாள் ஏப்ரல் 22 இந்த நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
1786 ஏற்பட்ட பெரும் எழுச்சியை தொடர்ந்து தொழிலாளர்கள் கைது, துப்பாக்கி சூடு, தூக்கு தண்டனை போன்ற கொடுமைகளை சந்தித்த உழைக்கும் வர்க்கத்தினரின் வாசகங்கள் மிக முக்கியமானது. தூக்கு மேடையில் இருந்த தொழிலாளர்கள், “இன்று நீங்கள் எங்கள் குரலை நெரிப்பதை விட, நேரம் வரும் அப்போது எங்கள் மவுனம் மிக சக்தி வாய்ந்தவையாக இருக்கும்” என்ற அந்த வார்த்தை தான் உலகம் முழுவதும் தொழிலாளர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2010-ல் கட்சியின் மாநில செயலாளராக நான் பொறுப்பேற்றேன், அடுத்து இரண்டு ஆண்டுகளில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரை சந்த்தேன். அவரை நான் சந்திக்கும் முன்பு ஒரு புத்தகத்தில் சினிமா பற்றிய செய்திகளை படித்துவிட்டுச் சென்றேன். அப்போது அவரிடம், “அன்று இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருடைய ஃபார்முலாவில் நீங்கள் பயணிக்கவில்லை, அப்படி இருந்தும் வெற்றி பெற்றது எப்படி?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் சினிமாவுக்கு வந்த போது, இப்போது இருக்கிற மாதிரி ஹாலிவுட் படங்களை பார்க்கும் வசதி இல்லை. இப்போது பத்து ஹாலிவுட் படங்களை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஒரு கதையை தயார் செய்துவிடுகிறார்கள், எங்களுக்கு அப்படிப்பட்ட வசதியில்லை. அதனால், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரிடமும் போகாமல் தனி பாதையில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர் படம் பண்ணலாம் என்று என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால்,உங்களை வைத்து படம் பண்னும் அளவுக்கு நான் திறமைசாலி இல்லை” என்று சொல்லி நான் மறுத்துவிடுவேன். இருந்தாலும், அவருடைய கட்டாயத்தின் பேரில் ‘தெய்வத்தாய்’ என்ற படத்திற்கு மட்டும் திரைக்கதை, வசனம் எழுதினேன்” என்றார். அதேபோல், இயக்குநர் பாலுமகேந்திரா எங்களுக்கு நெருக்கமானவர். அவர் கடைசியாக தலைமுறை என்ற படம் எடுத்தார். இயக்குநர் ராஜு முருகன், இன்று நேற்று நாளை படம் எடுத்த ரவிக்குமார், பாரதிராஜா இப்படி பலரை சந்தித்ததோடு, கமல் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரை சந்தித்தேன். ‘உழைப்பாளர்கள் தினம்’ படம் எடுக்கப்பட்டிருக்கும் கீழை தஞ்சை பகுதியை தலைகீழாக புரட்டிப்போட்ட மகத்தான தலைவர் ஒருவர் இருந்தார், அவர் பெயர் பி.சீனிவாசராவ். அவர் பிறந்தது கர்நாடகாவில், படித்தது பெங்களூரில். காந்திஜியின் அழைப்பை ஏற்று சென்னை வந்தவர், கம்யூனிசம் இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு கீழை தன்சைக்கு சென்றார். தமிழ் சுமாராக பேசினாலும், தமிழ் எழுத படிக்க தெரியாதவர்.
நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழை தஞ்சையில் கம்யூனிசம் வளர்ந்ததற்கு கர்நாடகாவில் பிறந்த் பி.சீனிவாசராவ் தான் காரணம். அவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் பல தகவல்களை கமல்ஹாசனை சந்திக்கும் போது அவரிடம் நான் கொடுத்து, உங்க உருவத்திற்கு அவரது வேடத்தில் நீங்கள் நடிக்கலாம் என்றும் சொன்னேன். அவரும் அதையெல்லாம் வாங்கிக்கொண்டு பார்க்கலாம், என்று சொன்னார்.

இங்கு பேசியவர்கள் மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் ஆடுஜீவிதம் படங்கள் பற்றி பேசினார்கள். ஒரு கதையை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படும் திரைப்படங்கள் என்றுமே மக்களிடம் வரவேற்பு பெறுமே தவிர, நடிகர்களுக்காக கட்டமைக்கப்படுகிற திரைப்படங்கள் வரவேற்பு பெறாது. உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் பல்வேறு அம்சங்களை திரைப்படமாக எடுத்திருக்கும் உங்களுடைய முயற்சி மிகப்பெரியது. இந்த படத்தை அனைவரும் வெற்றி படமாக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் ஒரு முக்கியமான படமாக ‘உழைப்பாளர்கள் தினம்’ மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்று வாழ்த்தியவர், மே தினம் பற்றி கவிஞர் தமிழ்ஒளி 1952 ஆம் ஆண்டு எழுதிய கவிதை தொகுப்பை இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜனுக்கு பரிசாக வழங்கினார்.

படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் நம்பீராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ரஜேந்திரன் சார், எங்க அண்ணன் நம்பிராஜன் , கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். இது எனக்கு உறுத்தலாகவே இருந்தது. அதுபற்றி கேட்டால், தெரியாது என்று சொல்கிறார்கள் இல்லை என்றால் அவர் சங்க உறுப்பினர் இல்லை என்று சொல்கிறார்கள். ஏன் அவர் உறுப்பினராகவில்லை, உறுப்பினராக ரூ.1.50 லட்சம் கண்ட வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் வெறும் சினிமா நடிகர்களுக்காக சங்கம் தொடங்கப்படவில்லை, நாடக நடிகர்களுக்கும் சேர்த்து தான் அந்த சங்கம். இன்றும் மதுரை, புதுக்கோட்டையில் பல நாடக நடிகர்கள் இருக்கிறார்கள். இன்று நமக்கு தெரிந்து சேசு போன்ற கலைஞர்கள் இறக்கிறார்கள். ஆனால், தெரியாமல் எத்தனை துணை நடிகர்கள், நாடக நடிகர்கள் மதுரை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் இறந்து போகிறார்கள். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் பலர் இறந்து போகிறார்கள், இதற்கு சங்கம் தீர்வு காண வேண்டும். வெறும் கட்டிடம் கட்டுவதற்கும், மலேசியா, சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்த நட்சத்திரங்களை அழைத்துச் செல்வதற்கும் மட்டும் சங்கம் இல்லை. பெரிய பெரிய நடிகர்களுக்காக கட்ட பஞ்சாயத்து பேசும் இடமாகத்தான் சங்கம் இருக்கிறது. எதாவது ஒரு நடிகருக்கு ரெட் கார்டு போட்டால், அதுபற்றி பஞ்சாயத்து பேசும் இடமாக மாறிவிடுகிறது, அதற்கான சங்கம் இல்லை. நான் சங்கத்தில் இல்லை அதனால் விமர்சிக்கலாம், சங்கத்திற்குள் இருந்துக்கொண்டு பேசக்கூடாது, நான் இல்லாததால் பேசுகிறேன்.

இப்போது கூட இது பற்றி பேச வேண்டுமா என்று யோசித்த போது, பலர், “நீ இப்போது தான் வளர்கிறாய், இது பற்றி பேசாதே” என்றார்கள், பிறகு வளர்ந்தவுடன் வளர்ந்துட்ட நீ பேசாதே, என்பார்கள், பிறகு எப்போது, யார் தான் பேசுவார்கள். வசூலை வைத்து ஒரு நடிகரை தீர்மாணிக்காதீர்கள், அவர்களுடைய படம் எப்படிப்பட்ட சிந்தனையை ஏற்படுத்துகிறது என்பதை பாருங்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், எம்.ஆர்.ராதா போன்றவர்கள் இதை தான் செய்தார்கள், அவர்களுடைய காலத்தில் சினிமா சிந்திக்க வைக்க கூடியதாக இருந்தது. ஆனால், இப்போது அது காணாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது. இதற்கும் என் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இருந்தாலும் இது மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக இங்கு பேசுகிறேன். அடுத்து ஒரு நடிகர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் இறந்தால் அது தமிழ் சினிமாவுக்கு அவமானம். அதனால், இந்த விசயத்தில் தமிழ் திரையுலகினர் தலையிட்டு ஒரு தீர்மாணத்தை ஏற்படுத்துங்கள்.

நான் சம்பாதிப்பதை எல்லாம் சினிமாவில் போடுவதாக சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை, எங்களுக்கு பிடித்த விசயத்தை செய்கிறோம். அதற்கு காரணம் என் குருநாதர் செழியன் சார், என் திரைப்படக் கல்லூரி. இரண்டுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சமீபத்தில் ஒரு மீம்ஸ் பார்த்தேன், மஞ்சுமேல் பாய்ஸ் படம் வெற்றி பற்றிய மீம்ஸ் அது. தமிழ்நாட்டில் பிற மொழி படங்கள் வெற்றி பெறுவது சந்தோஷமான விசயம் தான், அது புதுசும் இல்லை, சங்கராபரணம் முதல் டைடானிக் வரை இங்கு பல படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், அந்த மீம்ஸில் இருந்த வருத்தமளிக்க கூடிய விசயம் என்னவென்றால், தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு என்னாச்சு? என்பது போல் இருந்தது, அது தான் கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது. தமிழ் சினிமாவில் இப்போது கதையை கேட்டு தேர்வு செய்யும் தயாரிப்பாளர்கள் இல்லை. நடிகர்கள் தான் கதையையும், இயக்குநரையும் தேர்வு செய்கிறார்கள், தயாரிப்பாளரையும் தேர்வு செய்கிறார்கள். அதனால் தற்போதைய தமிழ் சினிமா நடிகர்கள் கையில் தான் இருக்கிறது. மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் ஹீரோ யார்? கதை தான், ஆனால், மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம், அந்த கதையை தமிழ் சினிமா தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தால் எடுத்திருக்க முடியுமா? என்றால் மவுனம் தான் அதற்கு பதில். இங்கு இருக்கும் சினிமா அரசியல் பற்றி தெரியாமல் குறை சொல்ல கூடாது. தமிழ் சினிமாவில் உலகத்தரம் வாய்ந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீதர் சார், பாரதிராஜா, பாலச்சந்தர் என இங்கு தலை சிறந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட சிறந்த இயக்குநர்கள் தற்போது இருந்தாலும், அவர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கி, அவர்களுடைய வசூலை அதிகரிக்க உதவுகிறார்களே தவிர புதிய முயற்சியை செய்வதில்லை, சின்ன நடிகர்களை வைத்து படம் எடுப்பதில்லை.

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையை எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார். இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.

அதேமாதிரி, கதை திருட்டு என்பது இங்கு தான் அதிகமாக இருக்கிறது. இது மிகவும் கேவலான ஒரு விசயம். வேறு எங்கும் என் கதையை திருடிட்டான், உன் கதையை காப்பியடித்தான் என்ற பிரச்சனை இல்லை. விவேக் காமெடி போல் எழுத்தாளர்கள் சங்கத்தில், முன் கூட்டியே ஒருவர் அபராதத்தை கட்டிவிட்டு, நான் அடுத்து இந்த கதையை திருடப்போகிறேன், அதற்கு இதில் கழித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது. இங்கு கதை எழுதினால் அவர்களுடைய பெயரை வசனம் எழுதியதாக போடுகிறார்கள், காரணம், வசனம் என்றால் ரீமேக் பண்ணும் போது அவருக்கு அதற்கான பணம் கொடுக்க வேண்டியதில்லை. இப்படி இங்கு பல மோசடிகள் நடக்கிறது. அகிர குருசேவா பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர் நான்கு எழுத்தாளர்களை வைத்து ஒரு படத்தை உருவாக்குவார், அந்த கதையாசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. சமூகத்திற்காக படம் எடுப்பார்கள், ஆனால் அவர்களிடம் சமூக அக்கறையே இருக்காது. நான் இந்த படத்தின் கதையை மூன்று பக்கம் தான் எழுதினேன், மீதியை எழுத்தாளர் ஜான் பாபுராஜ் தான் எழுதினார். அவருக்கு நான் அங்கீகாரம் கொடுத்திருக்கிறேன். இங்கு கதையாசிரியர்களின் பெயர்களை தான் முதலில் போட்டேன். இதை பற்றி பேசினால் தவறு என்கிறார்கள். வேறு யாராவது பேசுங்கள் என்றால், பேச மறுக்கிறார்கள். யாரும் பேசவில்லை என்றால் இந்த பிரச்சனைகளை யார் தான் பேசுவது.

சமீபத்தில் சட்டமன்றத்தில் முதல்வர்கள் அவர்கள் 500 கோடி ரூபாய்க்கு பிலிம் சிட்டி ஒன்றை கட்டப்போவதாக அறிவித்திருக்கிறார். அது நல்ல திட்டம். என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த சமயத்தில் ஒரு சின்ன கதை சொல்லிக்கொள்கிறேன். ஒரு பள்ளியில் இரண்டு பெண் குழந்தைகள் படிக்கிறார்கள், ஒரு குழந்தையின் தந்தை 50 ஆயிராம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார், மற்றொரு குழந்தையின் தந்தை 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அப்போது ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது. அந்த படத்தை பார்க்க ரூ.100 டிக்கெட், ரூ.150 பாப்கார்ன் உள்ளிட்ட செலவு ஆகும். 50 ஆயிரம் ரூபாய் வாங்கும் குழந்தையின் தந்தை அந்த படத்தை பார்த்துவிட்டு, பள்ளியில் சக மாணவர்களிடம் சொல்கிறாள், அதை கேட்கும் மற்றொரு பெண் குழந்தைக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது, தன் அப்பாவிடம் தானும் படம் பார்க்க வேண்டும் என்று கேட்கிறாள். ஆனால், அந்த தந்தையால் அழைத்துச் செலல முடியவில்லை. 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவரால் இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு படம் பார்ப்பது என்பது ஆடம்பர செலவாகிவிட்டது. தந்தை தனது மகளை சினிமாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார், ஆனால் தனியாக அனுப்ப முடியாது என்பதால் அவர் உடன் செல்ல வேண்டும், அவர் சென்றால் இன்னொரு குழந்தையும் பார்க்க விரும்புகிறது. அவரை தொடர்ந்து அவரது மனைவியும் வருகிறார். இப்படி ஒரு குடும்பமே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.1000 செலவு செய்ய வேண்டும். அந்த 1000 ரூபாய்க்கு அவர்கள் கடன் வாங்குவதா?, பிள்ளைகளின் பள்ளி கட்டணத்திற்காக வைத்திருக்கும் சேமிப்பில் எடுப்பதா?, இல்லை அவர்களின் எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட சேமிப்பில் எடுப்பதா?, என்று யோசித்து இறுதியில் கடன் வாங்கி படம் பார்க்கிறார்கள். கடங் வாங்கி ஒரு திரைப்படத்தை பார்க்கும் நிலைக்கு மக்களை தள்ளியவர்கள் பெரிய நடிகர்கள் தான். இது ஒரு நவீன திருட்டு. சினிமா என்பது எளிய மக்களுக்கானது. காலையில் இருந்து வேலை செய்துவிட்டு மாலையில் படம் பார்க்கும் ஒரு எளிய சமூகத்தினருக்கான சினிமாவை இன்று அவர்களுக்கு எட்டாக்கணியாக்கி விட்டார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் நடிகர்களின் சம்பளம் தான். நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால், தயாரிப்பாளர்கள் அதை விநியோகஸ்தர்கள் தலையில் வைக்கிறார்கள், அவர்கள் திரையரங்கு உரிமையாளர்களின் தலையில் வைக்கிறார்கள், இறுதியில் அது ரசிகர்களாகிய மக்களின் தலையில் வைக்கப்படுகிறது. இதன் மூலம் உச்ச நடிகர்கள் அனைவருமே தமிழ் ரசிகர்களிடம் இருந்து திட்டமிட்டு சட்டபூர்வமாக திருடுகிறார்கள். இது தமிழ் ரசிகர்களுக்கு தெரிவதில்லை. இந்த விசயங்களை இதுபோன்ற மேடைகளில் பேசினால் தான் மக்களிடம் சேரும். பத்திரிகையாளர்களும் இது பற்றி எழுத வேண்டும், அப்போது தான் மக்களிடம் இவை சென்றடையும்.

இன்று ஒரு நல்ல அரிசி கிலோ ரூ.77 தான், ஆனால் ஒரு திரைபப்டத்தின் டிக்கெட் விலை ரூ.120-க்கு மேல் இருக்கிறது. ஒரு கிலோ அரிசியை உருவாக்க விவசாயி எவ்வளவு கஷ்ட்டப்பட வேண்டும். அதற்காக திரைப்படம் எடுப்பது சுலபம் அல்ல, அதுவும் கஷ்ட்டம் தான், கஷ்ட்டப்படமாலும் எடுக்கலாம், எடுக்காமலும் போகலாம். அரிசியை விட சினிமா முக்கியம் இல்லை, சினிமா இல்லனா மக்கள் வாழ்ந்துவிடுவார்கள், நான் சினிமாவில் இருப்பதால் சொல்கிறேன். ஆனால், இந்த திருட்டை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். காரணம், அவர்கள் அடுத்தக்கட்டமாக அரசியலை நோக்கி செல்கிறார்கள், அங்கேயும் இந்த திருட்டை தான் செய்யப்போகிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை, என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி நீங்கள் எதையாவது செய்ய நினைத்தால் முதலில் இங்கு சீர்திருத்தம் பண்ணுங்க. சின்ன படங்களுக்கு பெரிய தியேட்டர் கிடைப்பதில்லை. அதை சரி செய்ங்க. ஒரு தயாரிப்பாளர் தொழிலே தெரியாமல் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ண முடியாது. அதனால் நான்கு கோடிக்கு மேல் அவரால் முதலீடு செய்ய முடியாது. எனவே, அவங்க கொண்டு வரும் சிறிய படங்களுக்கு வாய்ப்பு கொடுங்க, அதற்கு வழி காட்டாமல் அவனை படம் எடுக்க வராதே என்று சொல்வது சரியில்லை. இது, பணம் இருப்பவன் தான் படிக்க வேண்டும் என்று சொல்வது போல தான். இதை மாற்ற வேண்டும் என்றால் அரசு திரையரங்கை திறக்க வேண்டு.

500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசு பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது.

கலைஞர் பெயரில் திரையரங்கம் திறக்கமால், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று சாதித்தவர்களின் பெயரில் திரையரங்கங்கள் திறக்க வேண்டும். ஒரு நகரத்தில் ஒரு திரையரங்கம் என்று ஐம்பது நகரத்தில் ஐம்பது திரையரங்கம் திறந்தால், ஒன்றின் மூலம் ரூ.12 கோடி வருமானம் கிடைக்கும். அதன் மூலம் ஐம்பது திரையரங்கம் மூலம் அரசுக்கு ரூ.600 கோடி வருமானம் கிடைக்கும். அதை அரசு பள்ளி, அரசு மருத்துவமனைகளுக்காக செலவிடலாம். திரைப்பட நகரம் மூலம் முதலீட்டை எடுக்க முடிதாது. டிக்கெட் விலையை ரூ.25, ரூ.50, ரூ.75 என்று வையுங்கள் நிச்சயம் அனைவரும் படம் பார்க்க வருவார்கள். இதை ஏதோ மேடை பேச்சாக நான் சொல்லவில்லை, பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலமாகவே சொல்கிறேன். ஊட்டியில் அரசு திரையரங்கம் நடத்துவதாக சொல்கிறார்கள், அதுபோல் மற்ற நகரங்களில் நடத்த வேண்டும்.

நடிகர்களுக்காக கதை பண்ணவே கூடாது என்று நான் சொல்கிறேன். நடிகர்கள் இயக்குநர்களின் அறிவை பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய வியாபாரத்தை பெருக்கிக் கொள்கிறார்களே தவிர, அவர்களால் சமூகத்திற்கு நல்ல படம் வரவே வராது.” என்றார்.

படத்தின் கதாநாயகி குஷி பேசுகையில், “நான் கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்தவள், இந்த படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சந்தோஷ் சாருக்கு நன்றி. என்னை சிபாரிசு செய்த இணை தயாரிப்பாளர் சிவா சாருக்கு நன்றி. இந்த படத்தின் போட்டோ ஷூட் நடந்த போது, தமிழ் எனக்கு சரியாக பேச வரவில்லை. அப்போது இயக்குநர் இது கிராமத்து கதை, தமிழ் வசனங்களை சரியாக பேசுவீங்களா? என்று கேட்டார். நான் உடனே முயற்சிக்கிறேன் சார், என்றேன். என்னை நம்பி அவர் இந்த வாய்ப்பை கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே அந்த கிராமத்திற்கு என்னை அழைத்துச் என்று அம்மக்களுடன் பழக வைத்தார்கள். அதன் மூலம் கிராம வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொண்டேன். அதேபோல், எடுக்க கூடிய காட்சி பற்றியும், அதற்காக வசனங்கள் பற்றியும் எனக்கு முன்பே சொல்லிவிடுவார்கள், அதனால் நான் பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்தேன். மாலதி கதாபாத்திரம் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரம். வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களின் கஷ்ட்டங்களை பற்றி தான் பேசுகிறார்கள், ஆனால் அவர்களுக்காக அவர்களின் மனைவிகள் இங்கு இருந்தபடியே எப்படிப்பட்ட கஷ்ட்டங்களை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்காக ஏங்குகிற அவர்களின் மனசு பற்றியும் இதுவரை சொன்னதில்லை. அதை மாலதி கதாபாத்திரம் மக்களிடம் சரியான முறையில் எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன், அப்படி ஒரு வேடத்தில் என்னால் முடிந்தவரை நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர் பேசுகையில், “பொதுவாக சினிமா விழா என்றாலே சினிமா பிரபலங்களை வரவைத்து பிரமாண்டமாக நடத்துவாங்க. ஆனால், இங்கு உழைப்பாளர்களுகாக உழைக்கின்ற ஒரு தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தது புதிதாக தான் இருக்கிறது. இந்த குழுவினரை பற்றி எனக்கு தெரியாது, எனது நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் தான் என்னை அழைத்தார். இன்று கதைக்கும் தலைப்புக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாமல் இருக்கிறது. காதல், ஆக்‌ஷன் என ஜானருக்கு பொருத்தம் இல்லாத தலைப்பை வைப்பது தான் டிரெண்ட், ஆனால் நீங்க உழைப்பாளர் தினம் என்று ஏன் தலைப்பு வச்சிங்க என்று கேட்டேன். படத்தின் லைன் சொன்ன போது என் மனதை பாதித்துவிட்டது. ஆடு ஜீவிதம் போல், நம் குடும்பத்திற்காக, நம் அக்கா, தங்கை படிப்பிற்காகவோ, ஒரு பெண்ணை காதலித்து அந்த பெண்ணை கைப்பிடிக்க, ஒரு கனவு வீடு கட்ட, இப்படி பல விசயங்களுக்காக வெளிநாட்டுக்கு போய் பலர் கஷ்ட்டப்படுகிறார்கள், என்ற அந்த லைன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சேரன் ஒரு படம் பண்ணியிருந்தார், அவர் வெளிநாட்டுக்கு போகாமல், போனது போல் பொய் சொல்லிக்கொண்டு குடும்பத்திற்காக உழைப்பார். அப்படி சிங்கப்பூருக்கு சென்று உழைப்பவர்களின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறார்கள், அதற்காக தான் இந்த தலைப்பு என்றார்கள், நிச்சயம் இது பொருத்தமான தலைப்பு தான்.

இயக்குநர் இங்கு பேசும்போது அவரோட வலிகளை எல்லாம் கூறினார். ஆனால், அது நம்ம ஊருக்கு செட்டாகாது. நீங்க சொன்னது போல் மாரி செல்வராஜ் போன்றவர்கள் சிறிய படங்கள் மூலம் வெற்றி பெற்றாலும், அவர்களை வளரவிடக்கூடாது என்று பலர் நினைப்பார்கள். அதனால் தான் பெரிய ஹீரோக்கள் அவர்களை அழைத்து படம் கொடுத்து, பெரிய சம்பளம் கொடுத்து அவர்களை அப்படியே உட்கார வைத்துவிடுவார்கள். அவர்களுக்கும் வேறு வழியில்லை இல்லை. அப்படி அவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லவிலலி என்றால் நம்மை போல் கம்யூனிஷ கொடியோடு சுற்றிக்கொண்டு தான் இருக்க வேண்டும். ஆனால், சின்ன படமோ, பெரிய படமோ அதில் தங்களது கொள்கைகளை திணிக்கலாம், அதை அவர்கள் சரியாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பெரிய அரசியல்வாதி ஆகலாம், அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது. அரசியலில் நுழைந்து, எம்.எல்.ஏ, அமைச்சராகி நீங்கள் நினைத்ததை செய்யுங்கள். ஆனால், இங்கு அதை செய்ய முடியாது, அப்படி ஒரு அரசியல் இங்கு இருக்கிறது. ஆனால் நீங்க அனைத்தையும் ஐய்யா முன்பு பேசிவிட்டீர்கள், அதனால் இது எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு சென்றடைந்துவிடும். அவர் அங்கு நாசுக்காக சொல்லி, தியேட்டர் கட்டுவது, டிக்கெட் விலை குறைப்பது போன்ற வேலைகளை செய்துவிடுவார் என்று நம்புகிறோம், அதனால் சந்தோஷ் நம்பீராஜனுக்கு நன்றி.

படத்தின் இசையும், பாடல் வரிகளும் சிறப்பாக இருந்தது. அதேபோல், நாயகன், நாயகி இடையே இருந்த கெமிஸ்ட்ரி மற்றும் நாயகனின் பிரிவை நாயகி வெளிப்படுத்தும் விதம் அனைத்தும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. சின்ன படம் பெரிய படம் என்று பார்க்க வேண்டாம். இப்போதெல்லாம் சின்ன படங்கள் தான் ஓடுகிறது, அதனால் தான் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், பெரிய படங்கள் வந்தாலும், அவற்றால் தயாரிப்பாளர்கள் வேதனை தான் அடைகிறார்கள், நடிகர்கள் மட்டுமே பெரிய படங்களால் வாழ்கிறார்கள். அதனால் நீங்கள் அதை பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். இந்த உழைப்பாளர்கள் தினம் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளை கூறிக்கொண்டு படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் நந்தகுமார் பேசுகையில், ”கம்யூனிசத்தலைவர் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியை பெருமையாக பார்க்கிறேன். நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் மூலமாகத் தான் இங்கே வந்தேன். இந்த மேடையை ஒரு புத்துணர்ச்சி மிக்கதாகவும், அறிவுச்சார்ந்தததாகவும் பார்க்குகிறேன். இயக்குநர் சந்தோஷ் பேசிய எதிலும் நான் இல்லை. நான் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன், எக்ஸ்கியூட்டி கம் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன். நான் சென்னைக்கு வந்து 20 வயதிலேயே ரெப்பாக சாதாரணமாக இருந்து, சிறு சிறு படங்களை வாங்கி விநியோகஸ்தராக வளர்ந்தேன். பிறகு தயாரிப்பாளராகலாம் என்று தான் கலாபக்காதலன் என்ற படம் பண்ணேன். அதை தொடர்ந்து அடுத்தடுத்து 10 படங்கள் தயாரித்தேன், அதில் 8 படங்கள் எனக்கு பெரும் நஷ்ட்டத்தை கொடுத்தது. விமல், ஓவியாவை வைத்து ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படம் தயாரித்தேன், அதன் பிறகு எனது சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டது. சுராஜ் சாரை வைத்து கத்தி சண்ட படம் பண்ணேன், அதுவும் பெரிய நஷ்ட்டத்தை கொடுத்தது. எனக்கு முதல் வெற்றியை கொடுத்த படம் ரோமியோ ஜூலியட் அது ஒரு புதிய இயக்குநர் இயக்கியது. அதேபோல், அறிமுக இயக்குநரை வைத்து நான் தயாரித்த 96 படமும் எனக்கு வெற்றியை கொடுத்தது. எனக்கு வெற்றி கொடுத்தவர்கள் என்றால் அது புதியவர்கள் தான், இயக்குநர்கள் மட்டும் இல்லை இசையமைப்பாளர்களாக நான் ஆறு பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இப்படி தொடர்ந்து புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு காரணம், நான் பல அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியிருக்கிறேன். அப்போது புதியவர்களின் வலி தெரியும், அதனால் தான் நாம் திறமையானவர்களை உருவாக்க வேண்டும், என்று பலரை உருவாக்கினேன். அதில் பலர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள், சிலர் நல்ல நிலைக்கு வரவில்லை. இங்கு இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சியை நான் பிராக்டிக்கலாக பார்க்கிறேன்.

நம்ம இங்கு உணர்வுகளையும், உண்மையான உணர்ச்சிகளையும் அடக்கி வைத்துக்கொண்டு வெற்றி பெறுவதை தான் இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும். சந்தோஷுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் எனக்கும் இருந்தது. இங்கு மிகப்பெரிய தலைவர் இருக்கிறார். ஆனால், இவரை நாம் மேடையில் உட்கார வைத்து என்றைக்காவது ரசித்தோமோ இல்லை. இங்கு அரசியல் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது. அதை எல்லாம் இங்கு நான் பேச வரவில்லை. இங்கு ஒரு நல்ல படம், நல்ல திரைக்கதை மட்டுமே அதை நல்ல படமாக கொடுத்திட முடியாது, அதற்கு நிறைய விசயம் இருக்கிறது. திரைக்கும், ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை குறைக்க வேண்டும், அதற்கான விசயங்கள் படத்தில் இருக்க வேண்டும். இயக்குநர் சந்தோஷ் நீங்கள் முதலில் வெற்றி பெற்றுவிடுங்கள், சந்தோஷ் யார்? என்பதை தெரியப்படுத்துங்கள், பிறகு நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதை பேசினால், அது மக்களிடம் எளிதில் சென்றடையும்.

இங்கு நிறைய செய்தி சொல்லியிருக்கிறார்கள், ஆனால் பத்திரிகையாளர்கள் இந்த படம் பற்றி ஒரு செய்தியை, ஒரு நாள் மட்டும் போடுவீர்கள். அப்படி இல்லாமல் இந்த ‘உழைப்பாளர் தினம்’ படம் பற்றி அடிக்கடி செய்தி போடுங்கள், அது இந்த படத்திற்கு உறுதுணையாக இருக்கும். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் மசூத் பேசுகையில், “நான் கேரளாவைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு தமிழ் சரியாக பேச வராது, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சந்தோஷ் சாருக்கு நன்றி. 15 வருடங்களாக கனவோடு சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னது போல் நாம் அனைவரும் உழைப்பாளர் தான். நானும் 6 வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்றியிருக்கிறேன். அதனால், இந்த படம் சொல்லும் வலி எனக்கு புரிந்தது, அதனால் எனக்கு பணியாற்ற சுலபமாக இருந்தது. இங்கு பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறேன், எனக்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

Comments (0)
Add Comment