கிரேக்க இலக்கியத்தின் முக்கிய படைப்பாக பார்க்கப்படும் ஒடிஸி காவியத்தை அடிப்படையாக வைத்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கி இருக்கும் திரைப்படம் தி ஒடிஸி. டிரோஜன் எனும் பெரும்போருக்கு பிறகு தாயகம் இத்தாக்காவை நோக்கி பேரரசர் ஒடிஸியஸ் தன்னுடைய சகாக்களுடன் பயணப்படுகிறார். அந்த சவால் நிறைந்த பயணத்தை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும், அந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் இன்னல்களுமே ஒடிஸி படத்தின் கதை.
அவரின் திரைப்படங்கள் புரியாதே என்ற வழக்கமான பேச்சுக்கு இடம் கொடுக்காமல், இம்முறை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் நோலன். போரால் ஏற்பட்ட சோர்வு, அரசனுக்கே உரித்தான நிதானம், எப்பேர்ப்பட்ட ஆபத்திலும் தளராத நெஞ்சுரம், மனைவி விஷயத்தில் காட்டப்படும் முதிர்ச்சி என அனைத்து உணர்ச்சிகளையும் கனகச்சிதமாக திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார் அரசர் ஒடிசியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேட் டாமன்.
கணவனுக்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்று உறுதிபூண்டு நிற்கும் கதாபாத்திரத்தை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் மனைவி பெனிலோப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா ஹாத்வே. மகன் டெலிமாச்சோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாம் ஹாலண்டும், அரசாட்சியை கைப்பற்ற முயலும் ஆன்டினஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராபர்ட் பேட்டின்சனும் நடிப்பில் கவனம் ஈர்த்தாலும், அவர்களுக்கான ஸ்பேஸ் மிகவும் குறைவு. படம் முழுக்கவே ஒடிசியஸ் கதாபாத்திரத்தின் மீதே ட்ராவல் ஆவதால் இன்ன பிற கதாபாத்திரங்கள் கவனம் ஈர்க்கவில்லை.
புயல், மழை, குகை, கடல், போர், அரசாட்சி என பரந்து விரியும் திரைக்கதையில், நோலன் காட்டிய பிரமாண்டம் சிலிர்க்க வைக்கிறது. ஆக்ஷன் அதகளப்படுத்துகிறது. ஓடிசி – பெனிலோப் இடையேயான காட்சிகளை நோலன் அணுகிய விதமும், அந்த இடங்களில் தூவப்பட்ட வசனங்களும் படத்தின் பெரும் பிடிப்பு. அப்பா -மகன் எமோஷன் கனெக்ட் ஆகவில்லை. படத்தின் பல இடங்களில் இடம்பெறும் மைக்ரோ ட்ராமக்கள் திரில்லிங் அனுபவத்தை உருவாக்கி ஒடிஸியின் பயணத்தை போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறது. ஒளிப்பதிவாளர் ஹொய்டே வான் ஹொய்டெமாவின் ஒளிப்பதிவு நம்மை அந்தக்காலக்கட்டத்திற்கே கொண்டு சென்று விடுகிறது. ஐமேக்ஸ் கேமராக்களில் படமாக்கப்பட்ட காட்சிகளை மிக நேர்த்தியாக கத்தரித்து இருக்கிறார் எடிட்டர் ஜெனிபர் லேம். லூட்விக் கோரன்சனின் பின்னணி இசை காட்சிகளுக்கு எப்படிப்பட்ட இசை தேவையோ அதை மட்டும் நேர்த்தியாக கொடுத்து இருக்கிறது. புராணக்கதையை மிக தத்ரூபமாக சொல்லும் நோலனின் நிதானமான திரைக்கதை சிலருக்கு சோர்வை தருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், கொஞ்சம் பொறுமையாக பார்த்தால் நோலன் ஆக்கிய சமையல் நிச்சயம் நம் கண்களுக்கு விருந்து.