தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை’ புரோமோஷன் நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் ‘சின்னத்தாயி’ படத்தில் இருந்து ‘நான் ஏரிக்கரை…’ பாடலை நினைவு கூர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். காலத்தால் என்றும் அழியாத மெலோடி பாடலாக நிலைத்திருக்கும் அது இப்போதும் இசை ரசிகர்கள் மத்தியிலும் பல மியூசிக் ரியாலிட்டி ஷோக்களிலும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது.
இந்தப் பாடலையும் படத்தையும் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக நடிகர் தனுஷிற்கு சமீபத்தில் ‘ரெட் ஃபிளவர்’ மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் நடிகர் விக்னேஷ் நன்றி தெரிவித்துள்ளார். “இதுபோன்ற காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெலோடி பாடலை கொடுத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி. அவரது இசையில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம். இந்தப் பாடலையும் அதில் வேலை பார்த்தவர்களையும் ரசிகர்கள் நிச்சயம் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இத்தருணத்தில், நான் எனது முதல் பட இயக்குநர் மறைந்த திரு. கணேஷ் ராஜா அவர்களை நினைவு கூறுகிறேன்” என்றார்.
மேலும் நடிகர் தனுஷிற்கும் ‘இட்லி கடை’ படக்குழுவினருக்கும் படத்தின் வெற்றிக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். படத்தின் அர்த்தமுள்ள கருத்துகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாகவும் விக்னேஷ் தெரிவித்தார்.